புறம்பான இருள் - (பாகம் இரண்டு)

'அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்' - (மத்தேயு 24:48-51)

3. ஆயத்தம் இல்லாத ஊழியர்கள்:

சாதாரண விசுவாசிகளை விட ஊழியக்காரராய் ஜீவிப்பது நல்லதுதான். ஏனென்றால் ஊழியம் செயவதற்காகவாவது தன்னை ஆயத்தம் செய்து கொள்ள ஜெப ஜீவியம், வேத வாசிப்பு, பரிசுத்த வாழ்க்கை ஆகியவற்றை கண்டிப்பாக கடைப்பிடிப்பார்கள். ஆனால் ஊழியக்காராக வந்த பின்பும், உத்தமமாய் வாழாமல், ஒழுங்குள்ளவர்களாய் ஜீவிக்காமல், மாய்மாலமாய் ஊழியம் செய்பவர்கள் புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள் என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

கர்த்தருடைய ஊழியத்தை செய்ய வந்தவன், தன் வாழ்நாள் முடியும்போது, அழுகையும், பற்கடிப்புமிருக்கிற புறம்பான இருளிலே தூக்கி வீசப்படுவது எத்தனை வேதனையான பரிதாபம், ஊழியக்காரனுக்கு ஏன் இந்த முடிவு?.

இன்று ஊழியத்திற்கு வருகிற பலர் இந்த வேதப்பகுதியை வாசிப்பதும், சிந்திப்பதும் இல்லை. இப்படிப்பட்ட முடிவைக் குறித்து உணர்வதுமில்லை. ஊழியத்துக்கு வந்தால் கனம் கிடைக்கிறது, காணிக்கை கிடைக்கிறது, எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பில் துள்ளி குதித்துக் கொண்டு பலர் ஊழியத்திற்கு வந்து விடுகிறார்கள். ஆனால் அவர்களுடைய ஜீவியத்தில் கர்;த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஏற்ற ஆயத்தம் காணப்படுவதில்லை.

கர்த்தருடைய வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ஊழியக்காரனுக்கு இருக்க வேண்டிய ஆயத்தம் என்ன?.

1. விசுவாசிகளுக்கு ஏற்ற போஜனம் கொடுக்க வேண்டும். அதாவது விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கேற்ற தேவ செய்திகளை கொடுக்க வேண்டும்.

2. ஊழியத்தில் உண்மையாய் இருக்க வேண்டும்.

3. ஊழியத்தில் விவேகமுள்ளவனாய் இருக்க வேண்டும்.

அப்படிப்பட்வர்களே கர்த்தருடைய வருகையில் பங்கடைவார்கள். ஆனால் இந்த மூன்று நற்பண்புகளும் இல்லாமல், மூன்று தீய பண்புகளோடு அந்த ஊழியக்காரன் காணப்பட்டான்.

1. வெறியரோடு ஐக்கியம் கொண்டான்
2. உடன் வேலைக்காரரை அடித்தான்
3. புசிப்பிலும், குடிப்பிலும் மூழ்கிப் போனான்
இவ்விதமாக கர்த்தர் கொடுத்த ஊழியத்தை உண்மையாய் செய்யாதவர்களை அழுகையும் பற்கடிப்புமான புறம்பான இருளிலே தூக்கி எறியுங்கள் என்று எஜமானாகிய இயேசுகிறிஸ்து கூறுவார்.

அன்பான ஊழியரே அபிஷேகம் நிறைந்த அப்போஸ்தலர் நடத்துகிற ஐக்கியத்தில் இணைந்து கொள்ளுங்கள். அந்த அப்போஸதலரோடு தீர்க்கதரிசிகளும், சுவிசேஷகர்களும், மேய்ப்பர்களும், போதகர்களும் ஐக்கியமாய் இருக்கிறார்களா என்று கவனமாய் கவனியுங்கள். நல்ல ஐக்கியமுள்ள ஊழியர் ஆண்டவரின் வருகையில் எடுத்துக் கொள்ளப்பட வாய்ப்புண்டு. ஆவிக்குரிய ஐக்கியம் கொள்ளாதவர் கர்த்தரின் வருகையில் கைவிடப்பட்டு, அழுகையும் பற்கடிப்புமான புறம்பான இருளிலே தூக்கி எறியப்படுவார்கள்.

4. தாலந்துகளை புதைத்து வைத்த ஊழியர்:
கர்த்தருடைய பிள்ளைகள் அனைவருக்கும் விசேஷமாக, ஊழியர்களுக்கும் தேவன் தந்துள்ள கிருபை வரங்கள் ஏராளம். அதற்கும் மேலாக தாலந்துகளும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவரிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவரிடத்தில் ஒரு தாலந்தும் கொடுக்கப்படுகிறது. கர்த்தருக்கு ஊழியம் செய்ய நமது சொந்த கல்வி, திறமை, பட்டங்கள் போதாது. நம்மிடம இருக்கிற எல்லா தகுதிகளையும் தேவனுடைய அபிஷேகத்தால் நிரப்பும்போது, தாலந்துகள் கிடைக்கிறது.

உதாரணமாக பெலிஸ்தரிடமிருந்து கோலியாத்தை வீழ்த்துவதற்கு சவுல் ராஜாவாலும் முடியவில்லை. படைத்தளபதியாகிய அப்னேராலும் இயலவில்லை. ஆனால் ஐந்து தாலந்தை பெற்றிருந்த சிறுவனாகிய தாவீதினால் கோலியாத்தை வீழ்த்த முடிந்தது. தாவீது கையிலிருந்து ஐந்த தாலந்துகள் முறையே, கவண், கல், சுரமண்டலம், துதி, பாடல். இவற்றை கொண்டுதான் தாவீது கோலியாத்தை வீழ்த்த முடிந்தது.

அதுபோலவே தாலந்துகள் பெற்றவர்களால்தான் சாத்தானுடைய ராஜ்யத்தை அழித்து தேவனுடைய ராஜ்யத்தை ஸ்தாபிக்க முடியும். ஆத்துமாக்களை இரட்சிப்புக்குள் நடத்தி தேவனுடைய சபையைக் கட்ட முடியும். இப்படியிருக்க கர்த்தர் கொடுத்த தாலந்துகளை பயன்படுத்தாமல் புதைத்து வைப்பவர்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளே வைத்து வைக்கப்பட்டுள்ளது. தாலந்துகளை பயன்படுத்துகிறவர்கள் கர்த்தருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். 'பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்' (மத்தேயு 25:30).இந்த வசனத்தில் சொல்லப்பட்டபடி ஒரு தாலந்தை புதைத்து வைப்பவரின் முடிவு அழுகையும், பற்கடிப்புமான புறம்பான இருள்தான் என்று புரிந்து கொள்கிறோம். எனவே, பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு கொடுத்த தாலந்துகள் ஒன்றோ, இரண்டோ, ஐந்தோ அவைகளை தேவனுடைய ஊழியத்தில் பயன்படுத்துங்கள். அப்பொழுது நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

(பாஸ்டர் மா.ஜான்ராஜ் அவர்கள் எழுதிய மரணத்திற்குப்பின் சம்பவிப்பது என்ன என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இடையில் சற்றுக் குறைக்கப்பட்டுள்ளது).


பிரியமானவர்களே, 'நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்' என்று சொன்ன இயேசுகிறிஸ்துவை தள்ளிவிடுகிறவன், நிச்சயமாக ஒளியற்றவனாக இருளிலே இருப்பான். கர்த்தர் சொன்ன இந்த நான்கு வகையினரில் ஒரு வகையில் நாம் காணப்பட்டாலும், புறம்பான இருளிலேதான் நாம் பங்கெடுக்க முடியும். நித்திய நித்தியமாக கர்த்தருடைய பிரசன்னத்தை இழந்தவர்களாக புறம்பான இருளிலே செலவழிக்க வேண்டி வரலாம். அப்படி இல்லாதபடி நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, புறம்பான இருளாகிய கர்த்தருடைய பிரசன்னம் இல்லாத, அவருடைய சந்தோஷம், சமாதானமில்லாத இடத்திற்கு அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த நித்திய வாழ்விற்கு நாம் செல்லாதபடி, கர்த்தருக்குள் நம்மை காத்துக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். மாரநாதா! அல்லேலூயா!

புறம்பான இருள் - (பாகம் ஒன்று) 

Share this article :

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved