சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...

இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோ. மோகன் சி லாசரஸ் அவர்களைப் பற்றி...

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாலுமாவடி என்னும் அழகிய கிராமத்தில் பக்தி வைராக்கியமுள்ள இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்தான் நம் அன்பு சகோதரர் மோகன் சி. லாசரஸ் அவர்கள். சிறுவயதிலேயே தனது பாட்டியின் மூலம் இராமாயாணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை அதிகமதிகமாய் கேட்டறிந்தபடியால் தெய்வத்தின் மீதும், தான் சார்ந்திருந்த மதத்தின் மீதும் அளவற்ற பக்திவைராக்கியம் எற்பட்டது. இயேசுவை
க் குறித்து அறிவித்தபொழுது அவர் தெய்வமல்ல என்று வாதாடியதோடு மாத்திரமல்ல அவரைக் குறித்து எவ்வளவு கேவலமாக பேசமுடியுமோ அவ்வளவு கேவலமாக பேசிய அவரைதான் அன்புள்ள நேசர் இயேசு தேடிவந்து தனக்கென்று வல்லமையுள்ள சாட்சியாக நிறுத்த சித்தம்கொண்டார்.


அற்புதம்

1968ம் ஆண்டு சகோதரருடைய 14வது வயதில் ஒரு கொடிய வியாதி அவருடைய வலது காலைத் தாக்கிற்று. எத்தனையோ சிறப்பு மருத்துவர்களிடம் கொண்டு சென்று காண்பித்த பொழுதும் என்னவியாதியென்றே கண்டு பிடிக்க முடியவில்லை. வலது கால் முற்றிலும் செயலிழந்துவிட்டது. இருதயமும் வீங்கியது, எலும்பும் தோலுமாய் மரணப் படுக்கைக்குள்ளானார்கள். மருத்துவர்கள் கைவிட்டார்கள். வேண்டிய தெய்வங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்நேரத்தில்தான் இயேசு தேடி வந்தார். குடும்ப நண்பராகிய ஒரு கர்த்தருடைய பிள்ளை சகோதரரை பார்க்க வந்தபொழுது அவரிடம் சகோதரின் தாயார் என் மகனை எல்லோரும் கைவிட்டுவிட்டார்கள். நீ என் மகனுக்காக இயேசுவிடம் வேண்டுதல் செய்வாயா. . . . என்று கேட்டார். உடனே அவர் சகோதரரின் படுக்கை அருகில் முழங்கால்படியிட்டு ஜெபிக்க ஆரம்பித்த அந்த நேரத்தில்தானே அதிசயம் நிகழ்ந்தது திடீரென்று ஒரு தேவ வல்லமை சகோதரரின் சரீரத்தில் இறங்கியது. கால்களை அசைக்க முடியாதபடி படுத்திருந்த சகோதரன் நொடிப்பொழுதில் குணமாகி படுக்கையில் எழுந்து அமர்ந்துவிட்டார். அப்பொழுதுதான் இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை அறிந்து கொண்டார்.

இரட்சிப்பு

இயேசு தன்னை சுகமாக்கிவிட்டார் என்ற மகிழ்ச்சியில் சென்னை பாடி CSI ஆலய ஆராதனைக்கு சென்றாலும், வேதம் வாசித்து பக்தியோடிருந்தாலும் வாழ்க்கை மாறவில்லை. 1972 ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இரவில் இயேசு என்னோடு பேசவேண்டும் என் பாவங்களை மன்னிக்க வேண்டும், அதுவரை என் முழங்காலைவிட்டு எழுந்திருப்பதில்லை என்ற தீர்மானத்தோடு ஜெபிக்க ஆரம்பித்தார். இரவு முழுவதும் அதுவரை தான் செய்த பாவங்களை கண்ணீரோடு அறிக்கையிட்டு ஜெபித்தார். இரக்கமுள்ள தேவன் மார்ச் 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு நீ சாகாதபடிக்கு நான் உன் பாவங்களை மன்னித்தேன் என்று பேசினார் இரட்சிப்பின் நிச்சயத்தை கொடுத்தார். வாழ்க்கையில் ஆச்சரியமான மாற்றங்கள் உண்டாயின.

அபிஷேகம்

பரிசுத்தமுள்ள வாழ்க்கைக்காக ஒரு நாள் சகோதரர் தன் அறையில் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது தேவன் தமது வல்லமையால் சகோதரரை அபிஷேகித்தார். 1974ம் ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்ற ஆசீர்வாத முகாமில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து தெளிவாக அறிந்து கொண்டு ஜெபித்த பொழுது தேவன் பல மணி நேரம் பரிசுத்த ஆவியால் நிறைந்து பற்பல பாஷைகளை பேசும் கிருபையை கொடுத்தார்.

அழைப்பு

ஆவியானவரால் நிரப்பப்பட்ட பிறகு அழிந்து போகிற ஆத்துமாக்களைக் குறித்த பாரத்தினால் தேவன் நிரப்பினார். பலமணி நேரங்கள் ஆத்துமாக்களுக்காக கதறி ஜெபித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் கர்த்தர் தமது கனமான ஊழியத்திற்கு அழைத்தார். தேவனுடைய ஊழியத்தை எப்படி செய்வது என்று திகைத்து நின்ற பொழுது 1975ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தேவன் முகமுகமாய் தரிசனமாகி சுமார் அரைமணி நேரம் பேசினார். சகோதரன் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார். முடிவாக என் பெலத்தினால் ஊழியம் செய்ய முடியாது, நான் உம்முடைய கையைப் பிடித்துக் கொண்டு நடந்தால் ஒரு வேளை உலக ஆசைகள், பாடுகளைக் கண்டு உம்மை விட்டுவிடக்கூடும். நீர் என் கையைப் பிடித்துக் கொண்டால் ஊழியத்திற்கு வருகிறேன் என்று கண்ணீரோடு வேண்டிக் கொண்டபொழுது ஏசாயா 41:13 ன் படி உன் தேவனாகிய, கர்த்தராகிய நான் உன் வலதுகையை பிடித்து, பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன் என்று சொல்லுகிறேன் என்று வாக்குபண்ணினார்.

தரிசனம்

ஆண்டவரின் அழைப்பிற்கு கீழ்ப்படிந்து ஊழியத்திற்கு அர்ப்பணித்த பொழுது விசுவாச பயிற்சிக்காக வேதாகம கல்லூரியில் சில வருடங்கள் கல்வி கற்க தேவன் அனுமதித்தார். இயேசுவையே முற்றிலும் சார்ந்து நிற்கும் கிருபையை தேவன் இங்குதான் கற்றுக் கொடுத்தார். தெருப்பிரசங்கங்களில் பயன்படுத்தினார். இந்நிலையில் 1977ம் ஆண்டு சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு மலையிலுள்ள ஆதிவாசி மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்க ஒரு குழுவாக சென்ற பொழுது தேவன் இவ்வூழியத்தைக் குறித்த தரிசனத்தைக் கொடுத்தார். ஒரு நாள் அதிகாலைநேரம் மலையுச்சியில் தனித்து தேவ சமூகத்தில் காத்திருந்த பொழுது இயேசு விடுவிக்கிறார் என்ற பெயரைக் கர்த்தர் கொடுத்தார்.

வேதாகமக் கல்லூரிப்படிப்பை முழுவதுமாக படித்து முடிக்க ஆண்டவர் அனுமதிக் கொடுக்கவில்லை. முழு நேரமாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற அழைப்பு வந்த உடன் சென்னையை மையமாக வைத்து ஊழியம் செய்ய பெற்றோர்கள் ஆலோசனை கொடுத்தனர் அப்பொழுது உன் சொந்த கிராமத்திற்கு போ, அங்கிருந்துதான் என் ஊழியத்தை நீ நிறைவேற்ற வேண்டும் என்று ஆவியானவர் திருவுளம்பற்றினார்.

ஆண்டவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சொந்த கிராமமாகிய நாலுமாவடியில் இருந்து கொண்டு அழைக்கிற சபைகளில் சென்று ஊழியம் செய்து வந்தார்கள். மீதியான நேரங்களில் வனாந்திர பகுதிக்கு சென்று பலமணி நேரங்கள் தேவசமூகத்தில் காத்திருப்பார்கள்.

1978ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி திங்கட்கிழமை இந்த வனாந்திரத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது கர்த்தர் ஒரு தரிசனத்தைக் கொடுத்தார். ஆண்டவருக்காக செய்து முடிக்க வேண்டிய அநேக ஊழியங்களைக் காண்பித்தார். அன்று காண்பித்த தரிசனங்கள்தான் கடந்த 30 ஆண்டுகளாக இவ்வூழியத்தில் காலா காலங்களில் நிறைவேறி வருகிறது. அழைத்தவர் உண்மையுள்ளவர். இதுவரை நடத்தினார். இனிமேலும் நடத்துவார் என்று விசுவாசிக்கிறோம்.

இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் 1.தெச. 5:13

Share this article :

+ Comments + 1 Comments

10 June 2017 at 07:21

//அந்த சகோதரன், இயேசு கிறிஸ்துவின் மூலம் தான் பெற்ற அற்புதத்தை உலகமெங்கும் அறிவித்தும், நடப்பித்தும் வருகிறார்.// Sivanthi Michael

இயேசுகிறிஸ்துவின் கிருபையினால் இவா் சுகம் பெற்றது உண்மையானால், நல்ல ஆவிக்குரிய சபையில் இணைந்து இத மட்டும் சொல்லீட்டு சாட்சியாய் வாழ்ந்திருப்பார்.

இவரோ சற்றேனும் வசன வெளிச்சம் இல்லாமல் குருடனாய் வாழ்ந்து குருடா்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறாரே !! எப்படி?

அது இருவரையும் குழியில் விழப்பண்ணும்? என்பது தெரியாத பரிதாபமான மனிதா்தானே இவா்..

Post a Comment

 
Copyright © 2012-2021. CEYLON CHRISTIAN (TAMIL) - All Rights Reserved